Tuesday, May 4, 2010

புரியாத விளையாட்டு

என் ஒவ்வொரு விடியலும்
எதிர் வீட்டு வாசலில்,
நீ உதயமாவதிலிருந்து தான்
ஆரம்பமாகிறது.
முடிந்து போன கோலத்தை
மும்முரமாய் திருத்திக்கொண்டிருப்பாய் நீ:
வராத நாளிதளுக்காய்,
வந்து போய்க்கொண்டிருப்பேன் நான்!

குளித்து முடித்ததும்
கூந்தல் உலர்துவதற்காய்,
உன் வீட்டு மாடியில் நீ
காற்றில் கலந்து வரும் உன்
கூந்தல் நீர்த்திவளைகளுக்காய்,
காத்துக்கிடக்கிறேன் நான்!
நீ உலர்த்தி விடுகிறாய்;
நான் நனைந்து விடுகிறேன்!!

பக்கத்துவீட்டுப் பிள்ளைகளுடன்
கொஞ்சி விளையாடி குழந்தையாகிறாய்.
நான் பார்ப்பது தெரிந்தால் மட்டும்
அவசரமாய் குமரியாகிறாய்!

சொல்லாத காதலின் சுவை,
புரியாத கவிதையின்
புரிதலுக்கான தேடலைப் போன்றது!

கடந்து போன ஆண்டுகளுக்கும்,
பிரிந்து மறைந்த காதலருக்கும் சேர்த்து தான்
காதலிக்கப் போகிறோம்!
உலகத்து மரங்களெல்லாம்
ஒருசேர பூப்பொழியும்,
உனக்கான நாளொன்றில்
நானே நம் காதல் சொல்வேன்!!
அதுவரையில் விளையாடிக்கொள்வோம்
உன்னை தெரியாதவனாக நானும்,
என்னைப் புரியாதவளாக நீயும்...

3 comments: